வியாழன், 28 ஏப்ரல், 2011

கொதச்சு கட்டுதல்

தும்னி கட்டுதல் அல்லது கொதச்சு கட்டுதல் அல்லது விளக்கிடு கல்யாணம்

கார்கார்த்தார் சமூகத்தில் பெண் குழந்தைகள் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது வயதில் தை மாதம் முதல் தேதியன்று தாய்மாமனால் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சி.

எந்த வயதில் செய்கிறோமோ, அந்த வயதிற்கு ஏற்ப (5 வயது என்றால் 5 தங்கமணி) தங்கமணியும், பவளமணியும் (4 பவளமணி) வெள்ளிக் கம்பியில் கோர்த்து (ஒரு தங்கமணி அடுத்து பவள மணி அதற்கடுத்து தங்கமணி இப்படியாக) தாய்மாமன் மடியில் அமரவைத்து, பெண் குழந்தை கழுத்தில் அணிவிப்பார்கள்.


பவளம் என்பது சிவபெருமானின் அருள் வடிவைக் குறிக்கும். தங்கமணிகள் ஒன்பதும் நவசக்தி நாயகியாகிய பராசக்தியின் அருள் வடிவம். கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும்.


சிவ சக்தி வடிவமான நவதாலிஅம்மையும் அப்பனுமாக இருந்து அப்பெண் பெரியவள் ஆகி திருமணம் ஆகும் வரை கற்புக்குக் காவலாக மற்ற எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்து அவளை குலமகளாக விளங்கச் செய்து என்றென்றும் காக்கும் என்பது ஐதீகம். 

தாய்மாமன் சீர்வரிசை :

  •  பட்டுப்பாவாடை, பட்டுச் சட்டை, தாவணி, வெங்கலப் பானை, வெங்கலக் கரண்டி, பெரிய அகல் விளக்கு, துணை விளக்கு (தைப்பொங்கல் விளக்கு), பித்தளை தாம்பாளம், பச்சரிசி, பாசிப் பருப்பு, நெய், திரி, மொய் பணம் (100ன் மடங்கு + 1 ரூபாய் சேர்த்து - 101, 501, 1001 இப்படியாக) மண்ட வெல்லம், ஏலக்காய், முந்திரிப் பருப்பு, தட்டில் வைக்க – 3 தேங்காய், வாழைப்பழம் (எண்ணிக்கையில் ஒற்றைப்படை – 5, 7, 9), வெற்றிலை, பாக்கு, மாலை, துணை மாலை, தலைக்கு சூடும் பூ, காய்கறி, கரும்பு வகைக்கு பணம்.

  • கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும். வீட்டில் உள்ள அஞ்ஞானம், பேதைமை, வறுமை, நோய் மன சஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி நல்வழி காட்டியருள வேண்டி இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 

  • பொங்கலன்று காலை பெண் குழந்தை வயதிற்கு ஏற்ப (5 அல்லது 7), பானைகளில் பொங்கல் வைத்து விளக்கு முன் வைக்க வேண்டும்.  ஒரு பானை சர்க்கரைப் பொங்கல் மீதி ஒரு பானை வெண்பொங்கல்.  ஒரு பானை பொங்கல் குழந்தை தானே வைக்க வேண்டும்.

  •  தாய்மாமன் சீர் வரிசை விளக்கை முன்னே வைக்க வேண்டும்.  நிறை நாழி, நெல், சாணத்தில் செய்த பிள்ளையார், விளக்கு முன் வைக்க வேண்டும்.

  • குழந்தை தாய்மாமன் தந்த புத்தாடையை அணிந்து, தேங்காய் உடைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

  • தாம்பாளத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் விளக்கு வைத்து ஏற்ற வேண்டும்.  தாம்பாளத்துடன் ஆரத்தி எடுக்க வேண்டும்.  சின்ன மணமேடை அமைத்து தென்னை ஓலை, பாக்கு, வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.  மணமேடையில் தாய் மாமனும் புத்தாடை அணிந்து அமர வேண்டும்.  மங்கள வாத்தியம் முழங்க குழந்தையில் அம்மாச்சி குழந்தையை அழைத்து வந்து தாய்மாமன் மடியில் அமர வைக்க வேண்டும்.  தாத்தா போன்ற வயதில் மூத்தோர் கொதச்சு மணியை எடுத்து தாய்மாமன் கையில் கொடுக்க வேண்டும்.

  • தாய்மாமன் கொதச்சு மணியை குழந்தையின் கழுத்தில் அணிவிக்க வேண்டும்.

  • பெரியவர்கள் ஆசீர்வதிக்க வேண்டும்.

  • விருந்து பரிமாற வேண்டும்.

நவதாலியை திருமணம் நடைபெறும் நாள் வரை ஒரு பெண் அணிந்திருந்து கணவனால் திருமாங்கல்யம் பூட்டப்பட்ட பின் நவதாலியில் இருந்து பவள மணி மூன்றையும் தங்கமணி இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கோர்த்து திருமாங்கல்யத்தோடு கட்டுவது வழக்கம்.

கணவனது உயிரையும், உடைமைகளையும், குடும்பத்தையும் என்றும் என்னுடன் உடனிருக்க அருள் புரிய வேண்டும்என்று கட்டி விட வேண்டும். இதனை ‘கொதச்சுப் பிரித்துக் கட்டுதல்என்பர்.
 



முன்பு, முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், வீட்டிலிருக்கும் கன்னிப் பெண்களை அரண்மனைக்கு கவர்ந்து செல்லும் வழக்கமிருந்தது.  ஆனால், தாலி கட்டிய பெண்களைத் தொட மாட்டார்கள்.  அவர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பதற்காகவே இந்த நவதாலி அணியும் வழக்கம் வந்தது என்பது செவி வழிச் செய்தி.

விளக்கிடு கல்யாணம்


விளக்கிடு கல்யாணம் ஓர் சிறிய விளக்கம்

விளக்கிடு கல்யாணம் என்பது கார்காத்த வேளாளர் மரபில் 5 வயது கன்னிப் பெண்னிற்கு சிவசக்தி வடிவமான நவதாலியை தாய் வழிப் பாட்டனார் (தாய் மாமனார்) தைப் பொங்கல் முதல் நாளில் சூரிய பகவான் முன்பு கழுத்தில் அணிவிக்கப்படுகிறது.  நவதாலியின் அமைப்பானது சிவபெருமானின் அம்சமான பவழமணி பத்தும், நவசக்தியின் அம்சமான தங்க உருண்டைகள் ஒன்பதும் ஆக மொத்தம் 19 உருண்டைகள் சேர்த்து கோர்த்திருக்கும்.  9 நாயகிகளுக்கு 9 நாயகர்களும், 10வது பவளம் பிரதானமான ருத்திர மூர்த்தியான சிவபெருமானைக் குறிக்கும்.  19 மணிகளும் சிவசக்தி அருள் வடிவமாகும்.  5 வயது பெண் வளர்ந்து பெரியவள் ஆகி திருமண வயது வந்த காலத்தில் கணவனால் திருமாங்கல்யம் பூட்டும் வரை பெண்ணின் கற்புக்கு காவலாக, பாதுகாத்து, மந்திர தந்திரங்களாலோ (அ) வேறு தீயசெயல்களினாலோ தீங்கு ஏற்படாமல் பாதுகாத்து குலமகளாக விளங்க அம்மையும், அப்பனும் பெண்ணிற்கு அருள் கொடுத்து என்றும் காப்பார்கள் என்பது ஐதீகம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி.  5 வயது சிறுமியான பெண்ணிற்கு நல்லொழுக்கம், நற்பண்புகள், கல்வி, அறிவு, பொறுமை, தியாக உள்ளம், அன்பு நிறைந்த மனம், அடக்கம், தெய்வ வழிபாடு, பெரியோர்களை மதிக்கும் பாங்கு இவை யாவும் அமைய வேண்டும்.  அதை சிறுவயதிலேயே கடைபிடித்து வளர்ந்து வருவாளானால் இல்லத்துக்கு அரசியாக குடும்பத்தில் விளக்காக ஒளி வீசி என்றும் பிரகாசிக்க முடியும் என்பதற்காக விளக்கு பூஜையும் செய்வது என்பது வழக்கு.

அகல் விளக்கு சிவனின் வடிவமாகும்.  கைவிளக்கு சக்தி வடிவமாகும்.  108 இழைகள் எடுத்து அதை மூன்று பாகமாக பிரித்து ஜடை போலப் பின்னிப் போட்டு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.  வீட்டிலுள்ள அஞ்ஞானம், பேதமை, வறுமை, நோய், மனசஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி அம்மையே எனக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று வழிபடவேண்டும்.  பெண் ஆனவள் கணவனுடன் இணைந்து சிவசக்தியின் அம்சமாக ஒவ்வொரு இல்லத்திலும் விளங்க வேண்டும்.  வாழ்வுக்கு அரசியாக வாழ வேண்டும்.  எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் மங்கையர்க்கு அரசியாக எம்பெருமான் அருளால் என்றென்றும் வாழ்வார்கள் என விளக்கிடு கல்யாணத்தின் பெருமை குறிப்பதாக வரலாறு.

கார்கார்த்த வேளாளர் பற்றிய ஒரு சிறு குறிப்பு

பழம்பெரும் தமிழ்க்குலமான கார்காத்தார் என்றும், காராளர் என்றும், காரைக்காட்டார் என்றும் வழங்கப்படும் கார்காத்த வேளாளரின் வரலாறு பாரம்பரியம் மிக்கது.

இவ்வின மக்கள் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, தென்னார்க்காடு, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.

கார்காத்த வேளாளர் “உழுவித்துண்போர்” “உழுதுண்போர்” என இருவகைப்படுவர்.  இவர்கள் “வேள்” என்றும் “அரசு” எனவும் உரிமை பெற்றனர்.  இவர்கள் தொழில் உழுது பயிரிடுதல்.  வேளாளர் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவர் என்னும் பொருளுடையது என்பர்.  துலாபாரதானத்தில் அரசர்களை நிறுக்கும் தொழில் இவர்களுடையது என மனுவும், அரசர்களுக்கு முடிசூட்டுதல் மற்றும் அரசைப் பாதுகாக்கும் பணி இவர்களுடையது என கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றது.

கார்காத்தார் “பிள்ளை” என்ற பட்டப்பெயர் உடையவர்.  கார்காத்தார் மேற்கொண்டு ஒழுகிய திருமணச்சடங்கு, கருவுற்ற காலச்சடங்கு, குழந்தை பிறப்புச் சடங்கு, பருவ நிகழ்ச்சி சடங்கு மற்றும் பொதுவான சடங்குகள் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டையும், சிந்தனைத் திறனையும், அறிவியல் வளத்தையும் வெளிப்படுத்துகின்றன.

விளக்கேற்ற வேண்டிய திசைகளின் பலன்

கிழக்கு திசை : துன்பம் நீங்கும், கிரகபீடை விலகும்.

மேற்கு திசை : கடன் தொல்லை, சனி பீடை, கிரகதோஷம், பங்காளிகல் பகை நீங்கும்.

வடக்கு திசை : திருமணத் தடை, சுபகாரியத்தடை, கல்வித் தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.   திரவியம் கிட்டும், சர்வ மங்களங்கள் உண்டாகும்.

தெற்கு திசை : பெரும்பாவம், அபசகுணம்

குத்துவிளக்கில் ஒளியேற்றுவதற்கு உரிய பலன்கள்
ஒரு முகம்         -          மத்திம பலன்
இரு முகம்        -          குடும்ப ஒற்றுமை
மூன்று முகம்    -          புத்திர சுகம்
நான்கு முகம்    -          பசு, பூமி, செல்வம் கிட்டும்
ஐந்து முகம்      -          அனைத்து நலன்கள் கிட்டும்

புதன், 27 ஏப்ரல், 2011

கார்காத்தார் வரலாறு

கார்காத்தார் சமூக வரலாறும், வளர்ச்சியும்


தொகுப்பு : S.P.S. இராமகிருஷ்ணப்பிள்ளை, விருதுநகர்.
ஆதாரங்களுடன் கூடிய புதிய தொகுப்பு : க. குருசாமி பிள்ளை, வ.உ.சி.நகர், விருதுநகர்.



கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவனின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபறை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
-       அருள்திரு இராமலிங்க சுவாமிகள்


கார்கார்த்தார்

கார்கார்த்தார் என்பவர் காசினியில் முன்னாளில்
ஏர்காத்தார் என்பவர் இனியேனும் – நீர்காத்தா
சீர்காத்துச் செல்வமு ஞ்சேர்த்தே சிறந்த ஓர்
பேர்காக்க வேண்டும் பிரான்

நமது சமூகமும் சமூகச் சூழலும்

நமது சமூகம் வேளாளர் என்ற சமூகத்தின் கார்காத்தார் என்ற பிரிவை உடையது.  முன்னொரு காலத்தில் ஏர்காத்து, ஊராண்ட இக்கார்காத்தார் சமூகம் தற்சமயம் நலிவுற்று, மெலிவுற்று மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.  முற்பட்டோர் என்ற வகுப்பில் உள்ள நாம் பெரும்பாலானவர்கள், கல்வி, செல்வ நிலை மற்றும் உத்தியோக நிலை ஆகியவைகளில் பிற்பட்டோர் என்ற நிலையிலேயே உள்ளோம்.  இதற்கெல்லாம் மூலகாரணம் ஒற்றுமை, கட்டுப்பாடு, சமூகத்தொண்டு முதலியவைகள் நம்மில் குறைந்து கொண்டே வருவது தான்.  ஆகவே, நமது சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு, இந்த தலைமுறையினர் ஒற்றுமையுடனும், சமூகப் பாசத்துடனும், கட்டுப்பாட்டுடனும் சேவை செய்ய முன்வர வேண்டும்.  அவர்களுக்கு முதியோர் வழி கொடுத்து நெறிப்படுத்த வேண்டும்.  இதுவே நமது சமூகத்தின் இன்றைய சூழல்.

சமூக வரலாறு

இந்த சமூகத்தினருக்கு கார்காத்தார் எனப்பெயர் வரக்காரணம் யாது?  இவர்களின் முன்னோர்கள் எங்கு தோன்றி எங்கு சென்று எப்படிப் புகழ் அடைந்தனர்? என்றெல்லாம் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  நம்மை நாமே தெரிந்து கொள்ளாமல் நமது சமூக சடங்குகளையும், நடைமுறைகளையும் பின்பற்றுவது சிரமமே.  எனவே மேற்கூறியவைகளுக்கு விடை காண திருவாளர். நெல்லை. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் எழுதிய கார்காத்தார் வரலாறு என்ற சுவடியிலிருந்து சில விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறோம்.

கார்காத்தார், காராளர், காரைக்காட்டார் என்ற சொல் வேளாளரின் ஒரு பகுதியினரைக் குறிக்கும் சிறப்புச் சொற்கள்.

வேளாளர், வேளாண்மையர், வேள்வியாளர், வெள்ளாளர் இவைகளெல்லாம் பல காரணங்களால் திரிந்து வழங்கும் ஒரு சமூகத்தினரைக் குறிக்கும் சொற்கள்.  வேளாளர் என்போர் வருணாசிரம் தருமத்தில் வைசியர் என்னும் பிரிவில் உள்ளவர்கள்.  ஆதாரம் – வேளாளர் என்பவரின் தொழிலான வேளாண்மையைக் குறிக்கும் வடமொழிச் சொல் வைசிகம் ஆகும்.  எனவே வேளாளர் என்பவர் வைசியர் ஆவர்.  மேலும் ­­ ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டில் செளமிய (1850) ஆண்டுப் பதிப்பில் 3 பாட்டுகள் நாம் வைசியர் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய சூடாமணி நிகண்டு  - http://noolaham.net/project/42/4165/4165.pdf


இவ்வேளாளரின் ஆதித் தோற்றம் பார்வதிதேவி-உமாதேவி ஆகும்.  வேளாளர் கங்காபுத்திர் என அழைக்கப் பெறுவதால், வேளாளரின் பிறப்பிடம் கங்கை.  அக்கங்கைக்கு ஆதாரம் உமாதேவி ஆகும் என புராண வரலாறு கூறுகிறது.  எனவே வேளாளரின் தோற்றம் உமாதேவி தான் என அறியப்படுகிறது.  உமை அளித்த எட்டு உழக்கு நெல்லைப் பெற்று வேளாண்மைத் தொழில் செய்து உலகத்தில் 32 அறங்களும் முட்டின்றி நடைபெற காரணகர்த்தர்களாக இருந்து நமது சமூகம் பொதுப்பணி ஆற்றி வந்திருக்கிறது. வெள்ளத்தைத் தடுத்து ஆண்டதால் வெள்ளாளர் என்றும் விளைவாளர் என்பது மருவி வேளாளர் என்றும், அரசரால் விரும்பிய தன்மையும், ஆண்மையுடைய தொழிலாக மந்திரித் தலைமையும், சேனைத் தலைமையும் செய்து வந்தமையால் வேளாண்மையர் என்றும், கரை அமைத்து விவசாயம் செய்து காணி ஆண்டமையால் கரையாளர், காணியாளர் என்றும் அழைக்கப்பெற்றனர்.


கங்கை தீரத்தில் தோன்றிய வேளாளர் தென்னாட்டிற்கு வந்தது எப்படி?

ஆரியர்கள் வட இந்தியாவில் வந்து குடியேறிய பிறகு இவர்கள் குலசேகர பாண்டியனால் நமது தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பெற்றதாகவும், இவர்கள் பாண்டி நாட்டில் உள்ள கள வேள்வி நாட்டுப் பகுதியில் குடியேறியதாகவுக் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  தற்சமயம் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள வீரசோழம் என்னும் ஊர் களவேள்வி நாட்டின் பகுதியில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

கார்கார்த்தார் எனப்பெயர் வரக்காரணம்?

களவேள்வி நாட்டில் வேளாளர் குடியேறி இருந்து வரும் காலத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்ற போது புட்கலா வர்த்தம் (பொன்), சங்காரித்தம் (பூ), துரோணம் (மண்), காளமுகி (கல்) என்னும் நான்கு மேகங்கள் பாண்டியன் பகுதியில் ழை பொழியாமல் மேயக் கண்டு, கோபமுற்று அவற்றை சிறையிலடைத்து விட்டான்.  இதனை அறிந்த இந்திரன் சேனைகளுடன், பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று பாண்டியனுக்கு முடங்கல் வரைந்தான்.  அதாவது, பாண்டிய நாட்டில் மாதமொரு மழை பொழிய ஏற்பாடு செய்கிறேன்.  மேகங்களை விடுவித்து விடவும் என எழுதினான்.  அதைக் கண்ட பாண்டியன், இந்திரனின் கூற்றுக்கு யார் பிணை எனக்கேட்டான்.  அப்போது வேளாளன் ஒருவன் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக திருவிளையாடற் செய்யுள் 57, 58 ஆகியவைகளில் அறியக் கிடைக்கிறது. 

மேற்கூறியவாறு காருக்கு (மேகத்திற்கு) பிணை கொடுத்ததால் அந்த வேளாளனுக்கு கார்காத்தான் என்ற காரணப்பெயர் வந்தது.  அவனின் சந்ததியே நாம்.  எனவே கார்காத்தார், காராளர் என இரண்டும் காரணப் பெயர்கள்.  இதற்கு ஆதாரமாக கடம்புவன் புராணம், சிலப்பதிகாரம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளில் பாக்கள் உள்ளன.  மேகங்களைக் கட்டி வைத்த இடம் கட்டனூர் என்றும், சிறையிடப் பெற்ற இடம் இருஞ்சிறை எனவும் வழங்கப் பெற்றது.  இவ்வூர்கள் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ளதே நமக்குச் சான்று.

இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும். 

     (இ - ள்.) இட்டவன் சிறையை நீக்கி எழிலியை விடாது - இடப்பட்ட
வலிய சிறையினின்றும் நீக்கி முகில்களை விடாது, மாறுபட்ட சிந்தையனே
ஆக - மாறுகொண்ட உள்ள முடையனாக, பாகசாதனனுக்கு என்றும்
நட்டவன் ஒரு வேளாளன் - இந்திரனுக்கு எப்பொழுதும் நண்பினனாயுள்ள
ஒரு வேளாளன், நான் பிணைஎன்று தாழ்ந்தான் - நான்பிணை என்று
வணங்கினான்; அவிழ்ந்து மட்டு ஒழுகு நிம்பமாலிகை மார்பினானும் -
மலர்ந்து தேனொழுகும் வேப்ப மலர் மாலையை யணிந்த மார்பினையுடைய
பாண்டியனும் எ - று.

பாகசாதனனை நட்டவன் என உருபு மயக்கமுமாம். பிணை - புணை;
ஈடு. (57)

இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து
வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன்
எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு
விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம். 

இடுக்கண் வந்து உயிர்க்கும் ஊற்றம் எய்தினும் - துன்ப
முண்டாகி உயிருக்கும் இடையூறு வந்தாலும், வாய்மை காத்து -
மெய்ம்மையைப் பாதுகாத்து, வடுக்களைந்து ஒழுகும் - குற்றத்தையகற்றி
ஒழுகும், நாலாம் மரபினான் உரையை - நான்காங் குலத்தினனாகிய அவன்
கூறிய மொழியை, ஆத்தன் எடுத்து உரை மறைபோல் சூழ்ந்து - இறைவன்
(உயிர்களின் பொருட்டு) எடுத்துக் கூறிய மறை மொழிபோல் மதித்து, சிறைக் களத்து இட்ட யாப்பு விடுத்தனன் - சிறைச்சாலையின்கண் இட்டிருந்த தளையினை நீக்கினான்; மேகம் எல்லாம் பகடுபோல மீண்டன - முகில்கள் நான்கும் யானைகள் போல மீண்டு சென்றன எ - று.

 இடுக்கண் - வறுமை முதலிய துன்பம்; உயிர்க்கும் : உம்மை எச்சமும்
சிறப்புமாம். ஊற்றம் - ஊறு. வாய்மை காத்தலை வழுக்கறு வாய்மை
மாண்பும்என மேலே உரைத்ததனுள்ளுங் காண்க. வேத மொழிபோற்
பொய்யாதெனக் கருதி, களவேள்வி நாட்டில் ஏழூர்களையுடைய ஒருவன்
நாம் முன்என்று கூறிப் புணை நின்றான் என நம்பி திருவிளையாடல்
கூறும். (58)


திருமண நிகழ்ச்சிகளில் ஆனை அரசாணி உபயோகிப்பதன் நோக்கம்

மேற்கூறிய நமது முன்னோரின் செயலுக்கு மகிழ்ச்சியுற்று இந்திரன் தமது வெள்ளை யானையையும், தெய்வ லோகக் குதிரையையும், சப்த யானைகளையும், ஆயிரம் பெருந்திரியையும் உபயோகிக்க அனுமதி அளித்ததாகவும், அவைகளையே நாம் நமது இல்லத்தின் திருமண நிகழ்ச்சிகளில் தற்போது பதுமைகளாகப் பயன்படுத்தி வருவதைக் காண்கிறோம்.

கோத்திரங்கள் ஏற்பட்ட விதம்

முன்னொரு காலத்தில், சோழநாடு மழையின்மையால் வறட்சியுற்றது.  அப்போது ஆட்சி செய்து வந்த சோழன், பாண்டியன் வாயிலாக கார்காத்த வேளாளரின் வரலாற்றைக் கேள்விப்பட்டு, கார்காத்தார் இருக்குமிடத்தில் அவசியம் மழை பொழியும் என நம்பி பாண்டிய நாட்டில் உள்ள கார்காத்த வேளாளர்களில் 96 குடும்பத்தினரை அழைத்துச் சென்று வடக்கு தெற்கு ஆற்காட்டுப் பகுதியில் 96 ஊர்களில் குடியேற்றினான்.  காரணம் மழை எல்லா இடங்களிலும் பெய்ய வேண்டும் என்பதே.  நாளடைவில், இந்த தொண்ணூற்றி ஆறு குடும்பத்தினரும் தங்கள் சந்ததிக்கு ஓர் கோத்திரமாக அமைத்து ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் செய்து பெருகி வந்தனர்.  அதுவே இன்று தொண்ணூற்று ஆறு கோத்திரமாகத் திகழ்கிறது 
(சான்று : வருண சிந்தாமணியில் 96 கோத்திரங்கள் இணைப்பில் உள்ளன).


 ”பிள்ளை” என்று பெயருக்குப் பின் போடுவதன் காரணம்? 

சோழநாட்டில் வாழ்ந்து வந்த நமது மூதாதையரில் ஸ்ரீ வடமலையப்பன் என்பவர் திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள சோழபுரம் என்ற ஊரில் தோன்றி, தனது சிறிய தகப்பனாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.  தனது சிறிய தகப்பனாரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் கோபித்து, வீட்டை விட்டுச் சென்றார்.   இவரின் கல்வி, கேள்விகளை அறிந்து ஸ்ரீரெங்கம் என்ற ஊரில் இருந்த கர்த்தாக்களின் ஆச்சாரியரான, தாத்தாச்சாரி என்பவரால் “பிள்ளை” போல் வளர்க்கப் பெற்றார்.

நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கரிடம் நான் இவரை என் “பிள்ளை” போல் வளர்த்து தங்களிடம் அனுப்புகிறேன் என்று கூறியமையால், இவர் வடமலையப்ப பிள்ளை என்றும், தாத்தாச்சாரி என்ற ஐயனிடம் இருந்து வந்த பிள்ளை என்பதைக் குறிக்க ”பிள்ளையன்” என்றும் அழைக்கப்பட்டார்.  அதுவே பிற்காலத்தில் பெயருக்குப் பின்னால் “பிள்ளை” “பிள்ளையன்” என்ற சமூகப்பெயர்களை தாங்கி வந்தது (புலவராற்றுப்படையில் சான்றுகள் உள).  வடமலையப்ப பிள்ளை நாயக்க மன்னரால் திருநெல்வேலிச் சீமை தளபதியாக அமர்த்தப்பெற்று அப்பகுதியை ஆண்டு வந்தார் எனவும் அறிகிறோம்.

ஒரு செப்பேட்டு ஆய்வு - சமூக ரெங்கபுரம் செப்பேடு
சமூக ரெங்கபுரம் செப்பேட்டில் கி.பி. 1166ஆம் ஆண்டுக்குச் சமமான சகம் மற்றும் கொல்லம் ஆண்டுகள் குறிப்பிடப்பட்டாலும், எழுத்தமைதி, சொல் வழக்குகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அச்செப்பேடு 17ஆம் நூற்றாண்டில், குறிப்பாகத் திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடாகவே தெரிகிறது. திருமலை நாயக்கரின் பிரதானியான வடமலையப்ப பிள்ளை காரைக்காட்டு வேளாளர் வம்சத்தைச் சேர்ந்தவராவார். அவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பேரூரணியில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய தடயங்களையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் வடமலையப்ப பிள்ளையின் ஆதரவுடன் செழுகை வேளாளர்கள் இப்பகுதியின் மீது தாங்கள் கொண்டிருந்த நீண்ட நாளைய (சற்றேறக்குறைய 3 நூற்றாண்டுகள்) உரிமையைக் காத்துக் கொண்டனர் என நாம் முடிவு செய்யலாம்.

மேலும் “தாயிட்ட பெயரே தரையிட்டழைக்கு” என்ற பழமொழிக்கு ஒப்ப அருட் சக்தியான கங்கையினிடத்து உண்டான வேளாளர்களை “பிள்ளைகளே” என்று உமாதேவி அழைத்ததினால் அப்பிள்ளையெனும் பெயரே பட்டப் பெயராக வழங்குவதாயிற்று எனவும் அறியக் கிடக்கிறோம்.  (வருண சிந்தாமணி, வேளாளர் உற்பவச் சுருக்கம்).

சேக்கிழார் புராணம் - http://www.tamilvu.org/slet/l41d0/l41d0num.jsp?sno=144

வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
விழுக்குடிப் பிறப்பு மூவ ரேவிய வினைகேட் டாற்றும்
ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா
இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்.

     (இ - ள்.) வழுக்கு அறு வாய்மை மாண்பும் - தவறில்லாத
வாய்மையின் மாட்சியும், கங்கைதன் மரபின் வந்த - கங்கையின்
குலத்திற்றோன்றிய, விழுக்குடிப் பிறப்பும் - சீரிய குடிப்பிறப்பும்,
மூவர் ஏவிய வினைகேட்டு ஆற்றும் ஒழுக்கமும் - மூவர்கள் கூறிய
வினைகளைக் கேட்டு முடிக்கின்ற ஒழுக்கமும், வேந்தர்க்கு -
அரசருக்கு, அமைச்சாய் - மந்திரியாய், உறுதி சூழ்வினையும் -
ஆவன ஆராயும் வினையும், குன்றா - குறையாத, இழுக்கு அறும் -
கோழைபடாத, மேழிச் செல்வர் - மேழியால் வருஞ்
செல்வத்தையுடைய வேளாளரின், மறுகுவளம் - வீதியின்
வளப்பங்களை, இயம்பல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம்
எ - று.
     வேளாளர் வாய்மையிற் சிறந்தாராதலை,
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
     வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக்
     குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை
அறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்ப
     ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற்
     பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ"
எனச் சேக்கிழார் புராணத்துக் கூறப்பட்ட வரலாற்றானறிக. அவர்
கங்கை குலத்தினராதலை,

பல வரலாறுகளிலிருந்து, நம் முன்னோர்கள் மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சை, வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மேம்பட வாழ்ந்து வந்தனர் என்று அறிகிறோம்.

அச்சுத களப்பாளர், வெண்ணை நகர்க்கச்சியப்பர், சடையப்பர், ஏகம்பவாணர், பொய்கண்டகன்ற மெய்கண்ட தேவர், மாதவச் சிவஞான யோகிகள், பொய்யாமொழிக்கு ஓர் உரையாசிரியரான மணக்குடவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகத்திலமைத்துப் பாடும் பரிசு பெற்ற கடையேழு வள்ளலில் ஒருவரான பாரி ஆகியோரெல்லாம் நம்மவர்களே.  ஆகவே, இவர்கள் முன்னிருந்த உன்னத நிலைமையையும், அவர்களின் தோன்றல்களான நாம் இப்பொழுது அடைந்திருக்கும் பின்னடைவையும் சீர்தூக்கி

காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மரபை நாவலரைக் காவலரை நல்லோரைப் பூவலய உள்ளத்து அரும்பு உவையூரைச் சிறப்பித்தான் பிள்ளைப் பெருமாள் பிறந்து

என்பதிற்கியைய இனிமேலாவது, நம் முன்னோரைப் பின்பற்றி நாமும், அத்தகையோர்களின் வம்சத்தாரே என்பதை வாக்கால் அல்லாமல், செயலிலும் காட்டிச் சீரும் சிறப்பும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வாராக.

மேற்கூறிய நமது சமூக வரலாறும், நமது சமூகப் பாரம்பரியம் முதலியவைகளை நன்கு அறிந்து, அவைகளைக் கட்டிக்காத்து, நமது சமூகம் பெருகித் தழைத்திட, எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் கண்டிட நமது சமூக இளைஞர்களும், பெரியோர்களும் இணைந்து பணி செய்ய வேண்டுமாயும், நம் முயற்சி பலன் பெற எல்லாம் வல்ல இறைவனின் இன்னருளை வேண்டிக் கொண்டு நிறைவு செய்கிறோம்.
                                                                                                                                                                                                                                                                                                                                               
96 கோத்திரங்கள்

 1. அன்னலுடையான்                                                
 2. அஞ்சலுடையான்
 3. அங்கலுடையான்
 4. அங்கத்துடையான்
 5. அங்கனுடையான்
 6. அரியனிடையான்
 7. அச்சுதராயன்
 8. ஆவுடையான்
 9. ஆளுங்குடையான்
10. ஆலச்சுக்குடையான்
11. காளப்பாளன்
12. களத்துடையான்
13. கடம்புடையான்
14. கருப்புடையான்
15. கருவாளுடையான்
16. காருடையான்
17. காவலுடையான்
18. காலிங்கராயன்
19. காங்கயராயன்
20. குன்றலுடையான்
21. குளத்துடையான்
22. குமாரக்குடையான்
23. குலாவுடையான்
24. குணமாலுடையான்
25. குல்லத்திரையான்
26. கூடலுடையான்
27. கொழுமுடையான்
28. கோவுடையான்
29. கொற்றத்துடையான்
30. கொங்கராயன்
31. சாத்தனுடையான்
32. சாத்துக்குடையான்
33. சீனத்திரையன்
34. சீனத்தராயன்
35. சேனாதிராயன்
36. செம்புதிரையான்
37. சேவித்திரையன்
38. சேவுடையான்
39. தனவாருடையான்
40. தாக்குடையான்
41. திட்டத்திரையன்
42. தீவனுடையான்
43. தீபத்திரையன்
44. துளாருடையான்
45. தென்னவராயன்
46. தென்னப்பிரியன்
47. தென்னத்திரையன்
48. தொழுவுடையான்
49. நங்குடையான்
50. நன்னருடையான்
51. நாக்குடையான்
52. நெப்புக்குடையான்
53. நெடுவாலுடையான்
54. பரிவுடையான்
55. பளுவுடையான்
56. பனையுடையான்
57. பஞ்சத்திரையன்
58. பல்லவராயன்
59. பாலுடையான்
60. பாக்கமுடையான்
61. பாண்டித்திரையன்
62. மல்லுடையான்
63. பூதரமுடையான்
64. பூவனுடையான்
65. பெண்ணுமுடையான்
66. மங்கலமுடையான்
67. மணக்குடையான்
68. மருங்குடையான்
69. மழுவுடையான்
70. மாயனுடையான்
71. மாலுடையான்
72. மளுவத்திரையன்
73. மீனவராயன்
74. முனையதிரையன்
75. இயத்தனுடையான்
76. உத்தரக்குடையான்
77. உலகுடையான்
78. இறையுடையான்
79. எருமையுடையான்
80. எருக்குடையான்
81. வயலுடையான்
82. வழுத்தாவுடையான்
83. வங்காருடையான்
84. வல்லவராயன்
85. வசந்தராயன்
86. வானாதிராயன்
87. வில்லவராயன்
88. விசையராயன்
89. விழுதுடையான்
90. விச்சுடையான்
91. விருப்பத்திரையான்
92. வில்லதிரையான்
93. வேளாருடையான்
94. வெண்சாருடையான்
95. திட்டதுடையான்
96. இலூயனுடையான்



மூலப்பிரதி உதவி – திரு. கருப்பையா பிள்ளை, என்.ஜி.ஓ. காலனி, விருதுநகர்.
தயாரிப்பு  –  குரு. தாயுமானவன், வ.உ.சி. நகர், விருதுநகர்.
தொடர்புக்கு – karkaathar@gmail.com